கோலாலம்பூர், அக்டோபர்.27-
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி, புத்ராஜெயா அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அப்பீல் நீதிமன்றத் தலைவர் டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ் முன்னிலையில் அவர் இன்று திங்கட்கிழமை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இதனை கூட்டரசு நீதிமன்ற தலைமை பதிவதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலானைச் சேர்ந்தவரான 64 வயது முனியாண்டி மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளம் கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.
1980 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பணியாற்றத் தொடங்கிய அவர், சட்டத்துறை அலுவலகத்தில் அரசு வழக்கறிஞராக 1984 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
மாஜிஸ்திரேட், துணை பப்ளிக் பிராசிகியூட்டர் உட்பட சட்டத்துறை அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட முனியாண்டி, 2022 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர்நீதிமன்றதின் குற்றவியல் நீதிபதியாகப் பதவியேற்றார்.








