குவாந்தான், பிப்ரவரி.20-
குவாந்தான் செராத்திங் பகுதியில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, நடந்த துயரமான கொலை - தற்கொலை சம்பவத்தில் உயிரிழந்த 5 பேரின் நெருங்கிய உறவினர்களை, நேரில் சென்று பார்வையிட்ட பகாங் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு ஹாஸானால் இப்ராஹிம் அலாம் ஷா, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
மேலும், அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியதாக பகாங் அரண்மைனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசரின் வருகையின் போது, அவருடன், குவாந்தான் மாவட்ட அதிகாரி டத்தோ ஷாம்சுடின் ஜாலில், குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சமா ஆகியோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக, உயிரிழந்த ஐந்து குடும்ப உறுப்பினர்களின் உடல்களானது கடந்த புதன்கிழமை இரவு 7.20 மணியளவில், கம்போங் புடாயா செராத்திங் முஸ்லீம் கல்லறையில், இரண்டு கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில், கொல்லப்பட்ட 56 வயதான தாயார், அவரது 33 வயதான மருமகள் மற்றும் இரு குழந்தைகள் ஆகியோர் ஒரே கல்லறையிலும், அவர்களைக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட அவரது 32 வயது மகன் மற்றொரு கல்லறையிலும் புதைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.








