மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மக்கள் நலனை முன்னிறுத்தி, சேவை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, பணத்தைச் சம்பாதிக்கும் தளமாக அரசியாலைப் பயன்படுத்தக்கூடாது என்று சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவ பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் வாதிகள் அவ்வாறு பணம் சம்பாதிக்கும் பேராசையைக் கொண்டிருப்பார்களேயானால், வியாபாரத்தைத் தேர்ந்தெடுக்கலாமே தவிர, அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது என்று டாக்டர் சிவ பிரகாஷ் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, முந்தைய அரசாங்கத்தை, ஊழல் அரசாங்கம், ஊழல் அரசியல் வாதிகள் என்று குறைக் கூறிக்கொண்டிருந்தவர்கள், தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தப் பின்னர், மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தினால் விசாரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருவது அனைவரும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்பதையே பிரதிபலிக்கிறது என்று டாக்டர் சிவ பிரகாஷ் சாடினார்.
வறட்டு பேச்சுக்கள், செல்லரித்து போன அறிக்கைகள் ஆகிவற்றின் வாயிலாக லஞ்ச ஊழலைத் துடைத்தொழிப்பது குறித்து, வானுக்கும் பூமிக்கும் துள்ளி குதித்து பேசியவர்கள், இன்று எஸ்.பி.ஆர்.எம். மினால் விசாரிக்கப்பட்டு வருவது மக்கள் தெளிவுப் பெற வேண்டிய விஷயமாகும் என்று டாக்டர் சிவ பிரகாஷ் குறிப்பிட்டார்.
ஊழல் என்பது சமூக ஒழுக்கத்தை மீறுகின்ற ஒரு மோசமான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், அத்தகை ஊழல், பாதாளம் வரை புரையோடாமல் இருக்க கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய, தமது பணியில் சிறந்து விளங்குகின்ற, வர்த்தகத் துறையில் வெற்றிபெற்ற சீரிய பண்புகள் நிறைந்தவர்களைத் தங்களின் அரசியல் பிரதிநிதியாக எதிர்காலத்தில் மக்கள் தேர்வுச் செய்ய வேண்டும்.
அதே வேளையில், ஊழல் நிறைந்தவர்களை ஒடுக்குவதில் எந்தவொரு இடையூறுமின்றி எஸ்.பி.ஆர்.எம். தொடர்ந்து முழு வீச்சாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என்று டாக்டர் சிவ பிரகாஷ் வலியுறுத்தினார்.








