சிரம்பான், டிசம்பர்.12-
சிரம்பானில் ஒரு வயதே நிரம்பிய பச்சிளம் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக, அதன் பராம்பரிப்பாளரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.50 மணியளவில் அக்குழந்தையானது மயங்கிய நிலையில், சிரம்பானில் உள்ள தனியார் சுகாதார மையம் ஒன்றிற்குக் கொண்டு வரப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.
என்றாலும், சுகாதார மையத்தில் அளிக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சைகளுக்குப் பின்னர், அக்குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரெம்பாவ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில், அக்குழந்தையின் வயிற்றில் காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ளதாக அஸாஹார் அப்துல் ரஹிம் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அக்குழந்தையை கடந்த 5 மாதங்களாகப் பராமரித்து வந்த 32 வயதான பராம்பரிப்பாளரைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கானது குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31(1)(A)- இன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








