கோத்தா கினபாலு, மார்ச்.15-
மலேசிய உடன்படிக்கை 1963-இன் கீழ் சபா மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு வருவாய் உரிமையை மதிக்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கோத்தா கினபாலுவில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு என்பது இந்த உரிமையை எதிர்ப்பதற்கானது அல்ல, மாறாக முந்தைய தீர்ப்பில் உள்ள சில விளக்கங்களைத் தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே என விளக்கமளித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அந்நிய முதலீடுகளின் பலன் அடிமட்ட மக்களையும் சென்றடைவதையும் உறுதிச் செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சபா மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சமயக் கல்வி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட டிஜிட்டல் கல்வியை அறிமுகப்படுத்த 1.525 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.








