கோலாலம்பூர், ஜனவரி.06-
2026-ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு உரையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பொதுச் சேவைத்துறையில் டிஜிட்டல் மயமாக்கல் என்பது இனி ஒரு விருப்பமல்ல, அது ஒரு கட்டாயத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
அரசு சேவைகளின் தரம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க அனைத்து அரசுப் பணிகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெற வேண்டும் என்றும், AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இது மலேசியாவை ஒரு திறமையான மற்றும் போட்டித்தன்மை மிக்க டிஜிட்டல் நாடாக மாற்றும் நோக்கம் கொண்டது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் அமைச்சு, இந்த இலக்கை அடைய தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசு முகமைகளில் டிஜிட்டல் சேவை அமலாக்கம் 80 விழுக்காட்டை எட்டியுள்ளது.
2030-ஆம் ஆண்டிற்குள் 95 விழுக்காடு கூட்டரசு சேவைகளை ஆன்லைன் வழியாக வழங்கவும், 100 விழுக்காடு தரவுகளை டிஜிட்டல் மயமாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜனவரி 2026- ன் பாதியில் வெளியிடப்படவுள்ள 'பொது சேவைத்துறை டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் 2026-2030, கூட்டரசு முதல் உள்ளூர் ஊராட்சி மன்றங்கள் வரை ஒருங்கிணைந்த மாற்றத்தை உறுதிச் செய்யும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஊக்குவிக்க 'AI@Work' என்ற தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் வரை சுமார் 3 லட்சத்து 73 ஆயிரத்து 346 அரசு ஊழியர்கள் இதன் மூலம் ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் அன்றாடப் பணிகளை விரைவாக முடித்தல் போன்ற பயன்களைப் பெற்றுள்ளனர்.
2026-ஆம் ஆண்டில் இந்தத் தொழில்நுட்பம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, காகிதமில்லாச் சேவை மற்றும் மேம்பட்ட அரசு நிர்வாகத்தின் மூலம் மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதை தமது தலைமையிலான இலக்கவியல் அமைச்சு உறுதிச் செய்யும் என்று கோபிந்த் சிங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








