கோலாலம்பூர், டிச. 28-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தம்முடைய எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க விரும்பினால், அவர், மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 பிரிவின் முதலாவது விதியின் கீழ் கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டரசு பிரதேசத்தில் நிகழக்கூடிய எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனைக்கு ஆளாகும் நபருக்கு / பொது மன்னிப்பு வழங்குவதற்கும், அல்லது தண்டனையை ஒத்திவைப்பதற்கும் அல்லது தண்டனையிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் மாமன்னருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 42 பிரிவின் இரண்டாவது விதியின் கீழ் நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் எந்தவொரு தண்டனையையும் ரத்து செய்வதற்கும், இடை நீக்கம் செய்யவும், தண்டனையை குறைப்பதற்கும் மாமன்னருக்கு அதிகாரம் வழங்குகிறது என்று சட்டத்துறை அலுவலகம் சுட்டிக்காட்யுள்ளது.
எனவே தம்முடைய எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு நஜீப் விரும்புவாரோயானால் மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








