கோலாலம்பூர், பிப்ரவரி.22-
கோலாலம்பூர் சாலைகளில் மற்ற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் மிக நெருக்கமாகவும், வளைந்து நெளிந்தும் காரை ஓட்டிச் சென்ற நபர் ஒருவரைக் காவற்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 20 விநாடிகள் ஓடக்கூடிய இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, புக்கிட் அமான் போக்குவரத்துப் புலனாய்வு - அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இரண்டு உள்ளூர் நபர்களைப் பிடித்துள்ளதாக அதன் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.
அந்த நபர் முறையான சமிக்ஞை காட்டாமல் திடீர் திடீரென திசை மாறியதுடன், மற்ற வாகனங்களுக்கு மிகவும் அருகாமையில் சென்று ஆபத்தான முறையில் கார் ஓட்டியது முதற்கட்ட விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எத்தகைய விதிமீறல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று காவல் படையினர் எச்சரித்துள்ளனர்.








