எஸ்ஆர்சி சர்வதேச நிறுவனத்திற்கு ஏற்பட்ட 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பிற்கு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தான் பொறுப்பானவர் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி, நஜிப் தரப்பில் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்திற்கு, எஸ்ஆர்சி சர்வதேச நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், நஜிப் ரசாக் முன்னாள் பிரதமர் என்பதால் சட்ட விசாரணையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் எஸ்ஆர்சி தரப்பு வழக்கறிஞர் பி. கணநாதன் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
மேலும், தீர்ப்பை அமல்படுத்துவதால் தனது நற்பெயரும், பொதுமக்கள் மத்தியில் உள்ள மரியாதையும் பாதிக்கப்படும் என்ற நஜிப்பின் வாதம் இந்த வழக்கில் தொடர்பற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நஜிப் ஒரு முக்கிய பொதுப் பிரமுகர் என்பதால், மற்ற கடனாளிகளை விட அவருக்கு கூடுதல் சலுகை வழங்க முடியாது என்றும், நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்படும் இயல்பான விளைவுகளை குறிப்பிட்ட சூழலுக்குள் அடக்கக் கூடாது என்றும் பி. கணநாதன் தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி சர்வதேச நிறுவனம் தொடுத்துள்ள 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் சிவில் வழக்கில், நஜிப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, இன்று நடைபெற்ற விசாரணையில் காணொளி வாயிலாக பி. கணநாதன் தமது வாதத்தை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கில், முன்னாள் எஸ்ஆர்சி தலைமை செயல் அதிகாரி நிக் ஃபைசல் அரிஃப் கமில்வும் பிரதிவாதியாக உள்ளார். அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








