கிள்ளான், நவ. 25-
இந்திய கூட்டுறவுக்கழகங்களின் மேன்மைக்காக அண்மையில் நடத்தப்பட்ட மாநாட்டில் தொழில்முனைவோர், கூட்டுறவுக்கழக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனால் அறிவிக்கப்பட்ட 30 ஆயிரம் வெள்ளி மானியத்திட்டத்தை இந்திய கூட்டுறவுக்கழகங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணனின் முதிர்நிலை அந்தரங்க செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கேட்டுக்கொண்டார்.
இந்தியக் கூட்டுறவுக்கழகங்களின் அக்கப்பூர்வமான திட்டங்களுக்காக அறிவிக்கப்பட்ட இந்த 30 ஆயிரம் வெள்ளி மானியத்தை பெறுவதற்கு ஒவ்வொரு கூட்டுறவுக்கழகமும் முறையான ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கையை கொண்டு இருக்க வேண்டும்.

அவ்வாறு முறையான நிதி அறிக்கையை இந்திய கூட்டுறவுக்கழகங்கள் கொண்டு இருக்குமானால், தொழில்முனைவோர், கூட்டுறவுக்கழக மேம்பாட்டுத்துறை அமைச்சினால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிரத்தியேக பாரத்தை பூர்த்தி செய்து, அனுப்புவார்களேயானால் , அடுத்த ஆண்டு நிச்சயம் 30 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்படும் என்று டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார்.
நாட்டில் பழமை வாய்ந்த கூட்டுறவுக்கழங்களில் ஒன்றான கிள்ளான், மிட்லண்ட்ஸ் கூட்டுறவுக்கழகத்தின் 73 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தை நேற்று மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ அன்புமணி பாலன் மேற்கண்டவாறு கூறினார்.

சிலாங்கூர் மாநில கூட்டுறவுக்கழக இலாகாவின் அதிகாரி வருகையுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் முறையான கணக்கறிக்கை மற்றும் நிதி அறிக்கையை கொண்டுள்ள வேலு எண்டி தலைமையிலான மிட்லண்ட்ஸ் கூட்டுறவுக்கழகத்தின் செயல்பாட்டையும், அதன் ஆக்கப்பூர்வமான பணிகளையும் டத்தோ அன்புமணி பாலன் வெகுவாக பாராட்டியதுடன் அடுத்த ஆண்டு இக்கூட்டுறவுக்கழகத்திற்கு நிச்சயம் 30 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கப்படும் என்றார்.








