கம்பார், நவ.16-
நீர் நடவடிக்கைகளுக்கு பிரசித்திப்பெற்ற பயிற்சி முகாமான பேரா, கம்பார் ஆற்றில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வந்த மூவர், நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் இதுவரையில் 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்..
வாக்குமூலம் அளித்தவர்கள் அனைவரும் இந்த தன்முனைப்புப்போட்டியில் பங்கு கொண்டவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் ஆவர் என்று கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட்நஸ்ரி டாவுட் தெரிவித்தார்.
புலன் விசாரணை முழுமைப்பெறுவதற்கு இன்னும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே உயிரிழந்த மூவரின் உடல்கள், அவர்களின் குடும்பத்தினர் கம்பார் மருத்துவமனையின் சவக்கிடங்கிலிரந்து கோரிச் சென்றுள்ளனர் என்று முகமட்நஸ்ரி டாவுட் குறிப்பிட்டார்.
குழு பயிற்சி முறையை மேம்படுத்துவதற்காக பேரா, கோப்பெங்,சுங்கை ஜாஹாங்கில் முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வந்த பொதுப் பணி இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழுவினரில் மூவர் நேற்று மாலையில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, மரணம் அடைந்தனர்.
மாலை 5.56 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஆற்றில் ஒரு குழுவாக வாட்டர் ராப்டிங் நீர் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, மூவரும் நீரில் மூழ்கினர்.








