துணை அமைச்சர் டத்தோ ரமணன் திட்டவட்டம்
துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அதேவேளையில் இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவின் சிறப்பு பணிக்குழுவிற்கு தாம் தலைமையேற்று இருப்பது ஒரு பிரச்னையே இல்லை என்று தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சும், மித்ராவும் ஒரு தனி நபரால் நிர்வகிக்கப்படவில்லை. அவை ஆற்றல் வாய்ந்த குழுவினரால் வழிநடத்தப்படுகின்றன. இந்நிலையில் துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தாம், மித்ராவின் பணிக்குழுவிற்கு தலைமையேற்று இருப்பது ஒரு பிரச்னையும் அல்ல, சுமையும் அல்ல என்று துணை அமைச்சர் டத்தோ ரமணன் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டத்தோ இவோன் பெனெடிக் மற்றும் அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஶ்ரீ சுரியானி அஹ்மாட் ஆகியோர் தலைமையேற்றுள்ள தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சு, 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 99 விழுக்காடு நிதியை முழுமையாக பயன்படுத்தி, நாட்டில் மிகச்சிறந்த மூன்றாவது அமைச்சாக விளங்குகிறது.
இதேபோன்று ஆற்றல் வாய்ந்த 29 அதிகாரிகளுடன் தலைமை இயக்குநர் ஒருவரினால் மித்ரா நிர்வகிக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில் எங்களின் பங்கேற்பு என்பது யோசனைகளை பகிர்ந்து கொள்வது, அதற்கான பின்னூட்டம் வழங்குவது, செயல்பாடுகளை மேற்பார்வையிடுவது மட்டுமே. இது ஒரு கூட்டு முயற்சி என்பதால் துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தாம், மித்ராவிற்கு தலைமை வகிப்பது ஒரு பிரச்னையாக கருதவில்லை என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, மாஹ்ஸா பல்கலைக்கழகத்தில் நேற்று, எஸ்.பி.எம். மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு,செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ரமணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக, மித்ராவின் தலைவர் பதவியை தொடர்ந்து தற்காத்துக் கொள்வீர்களா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டத்தோ ரமணன், இது தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்யும் வரையில் அப்பதவியை வகித்து வரப் போவதாக குறிப்பிட்டார்.








