கோலாலம்பூர், டிச.3-
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கிளந்தான், திரெங்கானு, பெர்லிங், கெடா உட்பட மலேசியாவில் பத்து மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பேரிடரில் இதுவரை 100 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துகள் சேதமடைந்துள்ளது.
கிழக்குக்கரை மாநிலங்கள் உட்பட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, கடந்த காலங்களைவிட கடும் பாதிப்பை தரக்கூடியது என்று வானிலை ஆய்வுத்துறை கணித்திருந்த போதிலும் கிளந்தான், திரெங்கானு போன்ற மாநிலங்கள் மோசமான கட்டத்தை கடந்த இரண்டு வாரங்களாக எதிர்நோக்கியுள்ளன.
வீட்டை விட்டு வெளியேறி, துயர்துடைப்பு மையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உட்பட அத்தியாவசியப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அரசாங்க ஏஜென்சிகள், தன்னார்வாளர்கள் கடுமையாக உழைத்து வருவது குறித்தும் டத்தோஸ்ரீ அன்வார் பாராட்டினார்.








