புத்ராஜெயா, நவம்பர்.28-
நாட்டில் நீடித்து வரும் மோசமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்த சூழலையும் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்லும், புத்ராஜெயா கார்பரேஷனான பிபிஜேவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Senyar புயல் காரணமாக, பேரிடர் செயல்பாட்டு அறைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும்படி, பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா உத்தரவிட்டுள்ளார்.
அதே வேளையில், பொதுமக்கள் முடிந்தவரையில் ஆபத்தான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, தங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பல இடங்களில் கனமழையும், பலத்த காற்றும், வெள்ளப் பெருக்கும் தொடரும் நிலை ஏற்பட்டிருப்பதால், மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்படி அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப பொதுமக்கள் நடந்து கொள்ளுமாறும் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று நள்ளிரவில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் கடலோரப் பகுதிகளில் கரை கடந்த Senyar புயலானது, வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த வானிலை மண்டலமாக மாறியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.








