மலேசியாவில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகள் சுயமாக முன்வந்து தங்களது நாடுகளுக்குத் திரும்புவதற்கான 'நாடு திரும்பும் பொது மன்னிப்புத் திட்டம் 2.0' அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த பொது மன்னிப்புத் திட்டம், இன்று ஏப்ரல் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது இது 2027 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகள் சுயமாக தங்கள் நாடுகளுக்கு திரும்பும் இந்த பொது மன்னிப்புப்திட்டத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் டத்தோ ஜகாரியா விளக்கினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் 112 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2.5 லட்சம் குடியேறிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அரசாங்கத்திற்கு 127 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை வருவாயாகக் கிடைத்துள்ளது.
அதேவேளையில், சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தருவோருக்கு எதிரான அதிரடிச் சோதனைகள் நாடு தழுவிய ரீதியில் தீவிரப்படுத்தப்படும் என்றும், தண்டனைகளைத் தவிர்க்க விரும்பும் குடியேறிகள் உடனடியாக இந்த பொது மன்னிப்புத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களுக்கான அபராதத் தொகையை செலுத்தி விட்டு, நாடு திரும்ப வேண்டும் என்றும் டத்தோ ஜக்காரியா ஷாபான் வலியுறுத்தியுள்ளார்.








