பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சியிலுள்ள திரங்காணு, கிளந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள், 16-வது பொதுத் தேர்தல் நடைபெறும் அதே காலக்கட்டத்தில் மாநிலத் தேர்தல்களையும் நடத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் மூலம் கூட்டணியின் தேர்தல் இயந்திரப் பணிகள் எளிதாகும் என்றும், பிரச்சார நடவடிக்கைகள் மேலும் திறம்பட நடைபெற உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனித்தனியாக தேர்தல்களை நடத்துவதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் செலவுகளையும் கணிசமாக குறைக்க முடியும் என்றும் சனுசி விளக்கமளித்தார்.
கெடா மாநில மந்திரி பெசாருமான சனுசி, இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் தாம் கலந்துரையாடியதாகவும், பெரிக்காத்தான் நேஷனலின் இத்திட்டத்திற்கு அன்வாரும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.








