பாலியல் குற்றச் செயல்களில், 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அல்லது அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களால் தான் நடப்பதாக புக்கிட் அமான் பாலியல், மகளிர் மற்றும் சிறார் விசாரணைப் பிரிவின் உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில், அச்சுறுத்தலானது அந்நியர்களிடமிருந்து அல்ல, மாறாக குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நெருக்கமானவர்களிடமிருந்தே அதிகமாக உருவாகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அண்மையில் நடந்த பாலியல் குற்றச் சம்பவம் ஒன்றில், தொடக்கப் பள்ளி மாணவிகள் பலரை, ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது கண்டறியப்பட்டதாகவும், இதே போன்ற சம்பவங்கள் பல மாநிலங்களிலும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே குற்றச்செயல்களில் ஈடுபடுவது கவலைக்கிடமானதாக இருப்பதுடன், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளதாக சித்தி கம்சியா ஹசான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சமூக ஊடகம் மற்றும் இணைய தளங்கள் மூலமாகவும் பாலியல் குற்றங்களானது கணிசமாக அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறிப்பாக டிக்டாக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுச் செயலிகள் போன்ற தளங்களில், குற்றவாளிகள், சிறார்களை எளிதாக அணுகப் பயன்படுத்துவதாகவும் சித்தி கம்சியா ஹசான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








