ஈப்போ, நவ. 26-
ஈப்போ, ஜாலான் பெண்டாஹாராவில் உள்ள பொற்கொல்லர் வர்த்தகத் தலத்தின் முன்புறம் ஆயுதமேந்திய முகமூடி கொள்ளையர்கள் அறுவர், சுமார் மூன்று கிலோ தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அந்த பொற்கொல்லர் வர்த்தகத் தலத்தின் 50 வயது மதிக்கத்தக்க உரிமையாளர் மூன்று கிலோ தங்க ஆபரணங்களை வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதற்காக தனது வாகனத்தில் எடுத்து வைத்துக்கொண்டு இருந்த போது, வெட்டுக்கத்திகளை ஆயுதமாக கொண்ட முகமூடி கொள்ளையர்கள் அந்த வர்த்தகரை மடக்கியதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இரு கார்களில் வந்துள்ளனர். கத்தி மற்றும் பாராங் முனையில் தம்மை மடக்கிய கொள்ளையர்கள் தாம் காருக்கு வைத்திருந்த மூன்று கிலோ தங்க ஆபரணங்களை அப்படியே பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாக அந்த வர்த்தகர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.








