கோலாலம்பூர், பிப்ரவரி.05-
மங்கோலியப் பெண் அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர், முன்னதாகப் பெற்றிருந்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக மலேசிய அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அல்தான்துயா கொலைக்கு மலேசிய அரசாங்கம் பொறுப்பேற்காது என புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இதன் விளைவாக, ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு மற்றும் அதற்கான வட்டித் தொகையை அல்தான்துயாவின் குடும்பத்தினர் நேற்று அரசாங்கத்திடம் செலுத்தி விட்டனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அல்தான்துயா குடும்ப வழக்கறிஞர் சங்கீட் கவுர் டியோ, நீதிமன்ற உத்தரவின்படி, பெறப்பட்ட பணம் முழுமையாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது அப்படியே வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுள்ளது என்றார்.








