ஜோகூர் பாரு, மார்ச்.07-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று சனிக்கிழமை மெர்சிங் மாவட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை நேரில் ஆய்வு செய்ய 45 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் தாமே காரை ஓட்டிச் சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
மாமன்னரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, மெர்சிங்கில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் Tanjung Penyabong படகுத் துறைக்கும் அவர் நேரில் சென்றார். அங்குள்ள வசதிகள் மற்றும் தூய்மை நிலையை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
ஜோகூர் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் மெர்சிங் ஒன்று என்பதால், உள்ளூர் அதிகாரிகளும் பொதுமக்களும் சுற்றுப்புறத் தூய்மைக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாமன்னர் வலியுறுத்தினார். பொதுமக்கள் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்து, நகரத்தின் அழகைப் பராமரிக்கத் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.








