கூலாய், ஏப்ரல்.05-
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், அதன் பாதிப்பிலிருந்து மக்களின் நலனைப் பாதுகாக்கவும் மலேசிய அரசாங்கம் தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கூலாயில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், பன்னாட்டுச் சவால்களை எதிர்கொள்வதில் ஒழுக்கம், ஒத்துழைப்பு, தன்னம்பிக்கையே மலேசியாவின் பலமாக அமையும் என்றும், எத்தகைய தடைகளையும் நாடு உறுதியுடன் எதிர்கொள்ளும் என்றும் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை மலிவான விலையில் கண்டறிந்து சிக்கனமாக வாங்க, உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் 'PriceCatcher' செயலியைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இச்செயலியில் 480-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விவரங்கள் உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.








