நாட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள 5,000 மியான்மர் அகதிகளை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, அவர்களை அடையாளங்கண்டு, ஆவணப்படுத்தும் அதிரடிப் பணிகளை உள்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், "தேசிய பாதுகாப்பு மன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அகதிகளை ஆவணப்படுத்தும் இந்த நடவடிக்கை ஏற்கனவே அடிமட்டத்தில் தொடங்கிவிட்டது. இதில் முதற்கட்டமாக, மலேசியாவின் 19 குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் உள்ள சுமார் 22 ஆயிரம் கைதிகளில், அடையாளம் காணப்பட்ட 4 ஆயிரம் மியான்மர் நாட்டவர்கள் அனைவரும் நிர்வாக வசதிக்காக ஒரே முகாமிற்கு மாற்றப்படவுள்ளனர்," என்றார்.
அங்கு போலீஸ் மற்றும் குடிநுழைவுத் துறையின் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பிறகு, அவர்களின் அகதி அந்தஸ்து இறுதி செய்யப்பட்டு மியான்மருக்கு திருப்பி அனுப்பப்படுவர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மியான்மர் அரசாங்கத்திற்கு இடையே ஏற்பட்ட சுமூக பேச்சுவார்த்தையின் பலனாக இந்த வரலாற்றுப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள பெல்டா புக்கிட் தங்காவில் நடைபெற்ற 'போதைப்பொருள் இல்லாத லட்சியப் பயணம்' நிகழ்ச்சியில் சைபுடின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை கெடா ராஜா முடா தெங்கு சரஃபுடின் பட்லிஷா சுல்தான் சல்லேஹுடின் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.








