பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள ஒரு ஆதரவற்ற சிறார் இல்லத்தில், சிறுவர்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, அந்த இல்லத்தின் காப்பாளர் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெர்த்துபுஹான் கெபாங்கித்தான் தீகா தாங்கான் சிலாங்கூர் எனும் தன்னார்வத் தொண்டு இயக்கத்தின் செயலாளர் மகேந்திரன் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் கோம்பாக் சமூக நல இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பெர்த்துபுஹான் கெபாங்கித்தான் தீகா தாங்கான் சிலாங்கூர் இயக்கத்தின் தலைவர் மாரன் சுப்பையா தெரிவித்தார்.
இந்த இல்லத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 20 சிறுவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாரன் குறிப்பிட்டார்.
இவர்கள் அனைவரும் ஒரு 'ஹோம் ஸ்டே' இல்லத்திற்கு ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விடுதி உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் மூவரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் வாயிலாக இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளதாக மாறன் விவரித்தார்.








