May 22, 2026
Thisaigal NewsYouTube
120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி
தற்போதைய செய்திகள்

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

Share:

தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்கு, மலேசியாவிலிருந்து நாங்கள் கண்டனத் தீர்மானம் போட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா கடுமையாகச் சாடியுள்ளார்.

எந்த ஒரு மதத்தையும் யாரும் தாழ்த்திப் பேசக் கூடாது என்ற கடுமையான சட்டம் மலேசியாவில் உள்ளது போல, இந்திய அரசும் உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதே டான்ஸ்ரீ நடராஜா ஆற்றிய உரையின் மிக முக்கிய விவகாரமாகவும் கோரிக்கையாகவும் அமைந்தது.

பத்துமலைத் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட கண்டனக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய டான்ஸ்ரீ நடராஜா, வேற்று நாடுகளில் இந்துக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா குரல் கொடுக்கும்; ஆனால் இன்று இந்தியாவில் இந்து மதத்தை ஒழிக்கப் பேசுவது வேதனைக்குரியது என்றார்.

வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவும் மட்டுமே திமுகவினர் தொடர்ந்து இந்து மதத்தையும், கந்த சஷ்டி கவசத்தையும், நடராஜப் பெருமானையும் கொச்சைப்படுத்தி நாடகமாடி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டு, சிவபுராணம் மற்றும் மகாபாரதத்தில் போற்றப்பட்ட அழிவற்ற உன்னத தர்மமே சனாதன தர்மம் ஆகும் என்று விளக்கிய டான்ஸ்ரீ நடராஜா , உலகெங்கும் 120 கோடி இந்துக்கள் பின்பற்றும் இந்த தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்று கூறினார்.

தமிழகத்தில் உள்ள 260 சிவாலயங்கள், 30 சக்தி பீடங்கள் மற்றும் அறுபடை வீடுகளே இதன் அடிவேர்களாகும் என்றும், உலகெங்கும் உள்ள இந்துக்கள் அனைவரும் தங்களின் உண்மையான அடையாளமான சனாதன தர்மத்தைக் காக்க ஒன்றுபட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்தார்.

மேலும், 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று சட்டம் போடும் திமுகவினர், 'திமுக வென்றால் அனைத்து சாதியினரும் தமிழக முதல்வர் ஆக முடியும்' என்று சொல்லத் தயாரா என்ற கேள்வியையும் எழுப்பி, வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக ஆன்மீகவாதிகள் அனைவரும் விழிப்புணர்வுடன் ஒன்று சேர வேண்டும் என டான்ஸ்ரீ ஆர். நடராஜா தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் மகிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமாரும், உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

Related News