"உலகெங்கும் 120 கோடி இந்துக்கள் பின்பற்றும் சனாதன தர்மத்தை யாராலும் ஒருபோதும் ஒழித்துவிட முடியாது!" என்று கோலாலம்பூர் ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அதிரடியாகக் கூறியுள்ளார்.
பத்துமலைத் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட கண்டனக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய அவர், "வேற்று நாடுகளில் இந்துக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா குரல் கொடுக்கும்; ஆனால் இன்று இந்தியாவிலேயே இந்து மதத்தை ஒழிக்கப் பேசுவது வேதனைக்குரியது" என்றார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதற்கு, மலேசியாவிலிருந்து கண்டனத் தீர்மானம் போட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா ர் சாடினார்.
"வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவும் திமுகவினர் தொடர்ந்து இந்து மதத்தையும், கந்த சஷ்டி கவசத்தையும், நடராஜப் பெருமானையும் கொச்சைப்படுத்துகிறார்கள். சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டு, சிவபுராணம் மற்றும் மகாபாரதத்தில் போற்றப்பட்ட அழிவற்ற உன்னத தர்மமே சனாதன தர்மம் ஆகும்.
தமிழகத்தில் உள்ள 260 சிவாலயங்கள், 30 சக்தி பீடங்கள் மற்றும் அறுபடை வீடுகளே இதன் அடிவேர்களாகும்" என்று விளக்கிய டான்ஸ்ரீ நடராஜா , தங்களின் உண்மையான அடையாளமான இந்த தர்மத்தைக் காக்க உலகெங்கும் உள்ள இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் போடும் திமுகவினர், 'திமுக வென்றால் அனைத்து சாதியினரும் தமிழக முதல்வர் ஆக முடியும்' என்று சொல்லத் தயாரா?" என்ற கேள்வியையும் எழுப்பி, வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக ஆன்மீகவாதிகள் விழிப்புணர்வுடன் ஒன்று சேர வேண்டும் என டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்தினார்.
எந்த ஒரு மதத்தையும் தாழ்த்திப் பேசக் கூடாது என்ற கடுமையான சட்டம் மலேசியாவில் உள்ளது போல, இந்திய அரசும் உடனடியாகச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதே டான்ஸ்ரீ நடராஜாவின் முக்கிய கோரிக்கையாக அமைந்தது.
இந்நிகழ்வில் மகிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமாரும் கலந்துகொண்டு, சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.









