காஜாங், பிப்ரவரி.14-
ரவாங் ஆலய இடிப்பு விவகாரத்தை இன அல்லது சமய ரீதியான பிரச்சனையாகப் பார்க்க வேண்டாம் என்றும், அது நில ஆக்கிரமிப்பு தொடர்பான சட்டப் பிரச்சனை என்றும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கூட்டரசு அரசியலமைப்பிற்கு உட்பட்டு நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், பொதுமக்களை இதனை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 26 முதல் 39 வயதுடைய நான்கு உள்ளூர் ஆண்கள், உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் கோவிலை இடித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர்; அவர்களிடமிருந்து ஒரு ஜேசிபி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது. எனினும், செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய இரண்டு நாள் தடுப்புக் காவல் உத்தரவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர் என்று டத்தோ ஷாஸெலி விளக்கினார்.








