கோலாலம்பூர், மார்ச்.02-
மலேசியாவில் சீனப் பிரஜைகளிடமிருந்து சுமார் 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான கிரிப்டோகரன்சியைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 12 போலீஸ் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் இன்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் உட்பட மொத்தம் 12 போலீஸ் அதிகாரிகள், சீனப் பிரஜைகள் தங்கியிருந்த கன்றி ஹைட்ஸ் பங்களாவில் சோதனை நடத்திய போது கிரிப்டோகரன்சியைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சீனப் பிரஜை அளித்த புகாரின்படி, போலீஸ் துறையினரால் தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாகவும், பின்னர் சுமார் 50,000 டாலர் தொகையை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் தடயவியல் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக ஷாஸெலி கஹார் குறிப்பிட்டுள்ளார்.








