சிங்கப்பூர், அக்டோபர் 05-
சிங்கப்பூரிலிருந்து பழைய இரும்புப்பொருட்களை கொள்முதல் செய்த விவகாரத்தில் தங்களை மோசடி செய்து, பண இழப்புக்கு ஆளாக்கியது மட்டுமின்றி தங்களுக்கு எதிராக போலீசில் பொய் புகார் செய்த கிள்ளானைச் சேர்ந்த ஜெயசர்மா விவகாரத்தில் MIMTA ( மிம்தா ) எனப்படும் மலேசிய இந்தியர் உலோக மறுசுழற்சி வர்த்தகர் சங்கம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல், அவரை போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் தங்களுக்கு உதவிட வேண்டும் என்று சித்தியவான், RAKSHA METAL நிறுவனத்தின் வர்த்தக சகாக்களில் ஒருவரான குணாளன் ராஜகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாங்கள் வழங்கிய பணத்தில் எஞ்சியத் தொகையான 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 வெள்ளியை திரும்ப கொடுக்காமல் தங்களுக்கு எதிராக பொய் புகார் செய்த ஜெயசர்மா மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக தாங்களும் போலீசில் புகார் செய்து இருப்பதாக குணாளன் விளக்கினார்.

இந்நிலையில் ஜெயசர்மா விவகாரத்தில் போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக தாங்கள் காத்திருக்கும் வேளையில் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் சங்க உறுப்பினர்களும், மற்றவர்களும் ஏமாற்றப்படாமல் இருக்க, இவ்விவகாரத்தில் சங்க உறுப்பினர்களை பாதுகாப்பதற்கு மிம்தா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தை,/ குணாளன் கேட்டுக்கொண்டார்.
உறுப்பினர்களின் நலனை பாதுகாக்கும் மிகப்பெரிய கடப்பாட்டை மிம்தா கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் மிம்தா குரல் எழுப்புவது மூலம் ஜெயசர்மாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் போலீஸ் துறை விரைந்து செயல்பட முடியும்.

குறிப்பாக, உலோக மறுசுழற்சி தொழில்துறையினரை பாதுகாப்பதற்கு மிம்தா தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ ஆறுமுகம், போலீஸ் துறையுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஜெயசர்மா போன்ற மோசடிப் பேர்வழிகளின் செயல்களுக்கு, மிம்தா ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தாங்ள் எதிர்பார்ப்பதாக ரக்ஷா மெட்டல் நிறுவனத்தின் சார்பில் குணாளன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.









