வெள்ளிக்கிழமைகளில் தொழுகையினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியே, அம்பாங்கில் 46 வயது நபர் ஒருவர், பள்ளிவாசலில் ஒலிக்கும் தொழுகை அழைப்புக்கு எதிராகப் புகார் அளிக்கத் தூண்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தனிப்பட்ட முறையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், வேறு யாரின் தூண்டுதலும் இல்லை என்றும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.
வேலையற்றவரான அந்நபர், கடந்த பல ஆண்டுகளாகவே அம்பாங், Taman Suraya பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் வேறு தரப்பினர் ஈடுபட்டுள்ளனரா என்பதை அறிய, போலீசார் அவரிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பாங்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவது மற்றும் தொழுகைக்கான அழைப்பு விடுப்பது தொடர்பாக, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் பிறப்பித்த கட்டளையை மீறியதாகக் கூறப்படும் அந்நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பந்தன் இந்தா பகுதிக்கு அருகே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








