நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திட்டமிடலை வலுப்படுத்தவும், மின்சாரம் மற்றும் நீர் நுகர்வு தொடர்பான கவலைகளுக்குத் தீர்வுகாணவும், மத்திய அரசின் ‘தரவு மைய பணிக்குழுவில்’ மாநில அரசுகளும் இணைக்கப்படுவார்கள் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற 'NEXTDC KL1' தரவு மையத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோபிந்த் சிங், முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, பணிக்குழுவில் மாநிலப் பிரதிநிதிகளைச் சேர்க்க வேண்டும் என்ற சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன என்றார்.
மத்திய ஏஜென்சிகள் தேசிய அளவிலான அனுமதிகளை வழங்கினாலும், நீர் விநியோகம் மற்றும் ஊராட்சி அதிகார அமைப்புகளின் அனுமதிகளை மாநில அரசுகளே நிர்வகிக்கின்றன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசி வருவதாகவும், இக்குழுவில் இணைய அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்நிகழ்வில் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, 2030-க்குள் மலேசியாவை ஓர் 'AI தேசமாக' மாற்றத் தேவையான தரவு மையங்களின் துல்லியமான எண்ணிக்கையைத் தீர்மானிக்க, மத்திய-மாநில அரசுகளின் கூட்டுத் திட்டமிடல் அவசியம் என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் முன்னணி டிஜிட்டல் உள்கட்டமைப்பு நிறுவனமான NEXTDC- யின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.











