மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மெர்டேக்கா தினக் கொண்டாட்டத்தின் போது, போதைப்பொருளை கடத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த இருவரை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
37 வயது வர்த்தகரான என். சுரேஷ் மற்றும் 49 வயது முடித்திருத்துபவரான ஆர். நாகராஜன் ஆகிய இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோலாலம்பூர், சிகாம்புட், ஜாலான் உடாங் ஹரிமாவ்வில் உள்ள ஒரு வீட்டில் 315.58 கிராம் மெத்தாம்பெட்டமைன்யும், 22.5 கிராம் ஹெராயினையும் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இருப்பினும், சுரேசும், நாகராஜனும் கடத்தியதாக கூறப்படும் போதைப்பொருட்கள் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி நூர் ருவேனா நூர்தின் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். ரெவின் குமார், தனது கட்சிக்காரர்கள் அந்த வீட்டின் குடியிருப்பாளர்கள் அல்ல என்றும், சம்பவத்தன்று கழிவறையைப் பயன்படுத்தவே அந்த வீட்டிற்கு சென்றதாகவும் வாதிட்டார்.
இந்த வழக்கில் நேரடி தொடர்புடைய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த ஏ. கிருஷ்ணன் என்பவர், விசாரணை தொடங்கும் முன்பே காவலில் இருந்தபோது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.








