சுங்கை பட்டாணி, ஜூலை.13-
கெடா, சுங்கை பட்டாணி லோரோங் செம்பாக்கா இன்டா, தாமான் செம்பாக்கா புக்கிட் செலம்பாவ் எனும் இடத்தின் சாலை ஓரத்தில் பிறந்த இளம் ஆண் சிசுவைக் கண்டெடுத்ததாக கோலா மூடா தலைமை காவல்துறை அதிகாரி ஏசிபி ஹன்யான் பின் ரமலான் தெரிவித்தார்.
நேற்று காலை 9.55 மணி அளவில் அக்குடியிருப்பிலுள்ள ஒருவர் சாலை ஓரத்தில் ஓர் இளம் ஆண் சிசு ஆடைகளின்றி அழுத நிலையில் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார் .
அத்தகவலை அடிப்படையாக வைத்து காவல்துறை அவ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டதில் தாமான் செம்பாக்காவிலுள்ள ஒருவர் துணிகளைக் காய வைப்பதற்காக வெளியே வந்த சமயத்தில் சிசுவின் அழுகைச் சட்டத்தைக் கேட்டு அவ்விடத்தை நோக்கிச் சென்ற பொழுது இளம் ஆண் சிசுவைக் கண்ட அந்நபர் கூச்சலிட்டுக் கத்தியதில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கூடியதாக ஹன்யான் ரம்லான் கூறினார் .
தொடர்ந்து, கல் மணலில் கிடந்த அச்சிசுவை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். காவல் துறையின் விசாரணைக்குப் பின் அச்சிசு சிகிச்சைக்காக சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
இதற்கு இடையில் ஏசிபி ஹன்யான் கூறுகையில் 17 வயதுடைய இளைஞனைத் தேடி வருவதாகவும் அத்துடன் அச்சிசுவைப் பிரவித்த 19 வயதுடைய பெண்மணி சிகிச்சை பெற்று வருவதால் தற்பொழுது மருத்துவமனையில் தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் அவர்கள் இருவரும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது.








