தமது வெளிநாட்டுப் பண இருப்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர், இத்தகைய புகார்களைத் தாம் ஒருபோதும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும், குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அதற்குரிய வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும் சவால் விடுத்தார்.
யாராக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர்கள் கிடையாது எனக் குறிப்பிட்ட பிரதமர், ஆதாரங்கள் இன்றி பரப்பப்படும் வதந்திகளுக்குப் பதில் அளிக்கத் தமக்கு நேரமில்லை என்றார்.
முன்னதாக, பிரதமரின் முன்னாள் அதிகாரி ஒருவரைத் தொடர்புபடுத்தி வீடியோ ஒன்றில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்துப் பெர்சத்து கட்சி விசாரணை கோரியிருந்த நிலையில், பிரதமர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.








