மலாக்கா மாநிலத் தேர்தலைத் தள்ளிவைக்க எந்தவொரு வலுவான காரணமும் இல்லை என மாநில முதலமைச்சர் அப் ரவுஃப் யூசோப் தெரிவித்துள்ளார். தற்போதைய மாநில அரசின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் முடிவடையும் நிலையில், அரசியலமைப்புச் சட்டப்படி இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
உலகளாவிய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மலாக்கா மற்றும் ஜோகூர் தேர்தல்களைத் தள்ளிவைக்கலாம் என அம்னோ மூத்த தலைவர் அகமட் மஸ்லான் தெரிவித்த கருத்தை முதலமைச்சர் நிராகரித்துள்ளார். மாநில தேர்தலை தள்ளிப்போட வேண்டிய அவசியம் தமக்குத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மலாக்கா மாநில ஜசெக தலைவர் கூ போய் தியோங் அவசரநிலையை அறிவிப்பதன் மூலம் தேர்தலைத் தள்ளிவைக்கலாம் என ஆதரவு தெரிவித்திருந்தார். இருப்பினும், தேர்தலை ஒத்திவைக்க கோரும் அகமட் மஸ்லானின் தனிப்பட்ட கருத்து என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு அல்ல என்றும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.








