மலாக்கா, பிப்ரவரி.08-
பூலாவ் மலாக்காவுக்கு அருகே, உரிய ஆவணங்களின்றி 50 மெட்ரிக் டன் டீசல் ஏற்றி வந்த ஒரு கப்பலை மலேசிய கடலோர காவற்படை நேற்று மாலை பறிமுதல் செய்தது. சுமார் 180 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான அந்த டீசலை வாங்கியதற்கான இரசீதுகளோ அல்லது துறைமுக அனுமதியோ அந்தக் கப்பலின் மாலுமியிடம் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்ததாக மலாக்கா - நெகிரி செம்பிலான் கடலோர காவற்படை இயக்குநர் கேப்டன் மாரிதிம் சலேஹுடின் ஸாகாரியா தெரிவித்தார்.
சட்டத்திற்குப் புறம்பான டீசல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, கப்பலில் இருந்த 21 முதல் 62 வயதுக்குட்பட்ட ஐந்து இந்தோனேசிய ஊழியர்களும் பிடிபட்டனர். கட்டுப்படுத்தப்பட்ட பொருளை அனுமதியின்றி வைத்திருந்தது, விதிமுறைகளை மீறியது போன்ற குற்றங்களுக்காகச் சுங்கச் சட்டம், விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.








