கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல், நகர்ப்புற திட்டமிடல் அமைப்பில் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் அதன் 'சிறப்பு ஒன் ஸ்டாப் சென்டரான ஓஎஸ்சி செயற்குழுவை கலைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துணை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
இந்த சிறப்பு செயற்குழு, வளர்ச்சித் திட்டங்களுக்கான முடிவெடுக்கும் செயல்முறைகளில் தேவையற்ற தலையீடுகளுக்கு வழிவகுப்பதாக பிரதமருக்கான கொள்கை ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் 'புரோஜெக் கேபிட்டல்' சிறப்புப் பணிக்குழு கண்டறிந்துள்ளது. "சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் தாண்டி, பிற காரணிகளால் முடிவுகள் மாற்றப்படும் என்ற நிலையை மாடானி அரசாங்கம் அனுமதிக்காது" என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
தனது பதவிக்காலத்தில் இந்த செயற்குழு இனி கூட்டப்படாது என்றும், அதை முழுமையாக ஒழிப்பதற்கான முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இன்று டிபிகேஎல் தலைமையகத்தில் டத்தோ பண்டார் டத்தோ ஸ்ரீ ஃபட்லூன் மாக் உஜுத்ட்டுன் இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹன்னா இயோ இதனை தெரிவித்தார்.
இதன் மூலம் தேவையற்ற அரசு அதிகாரத்துவ அடுக்குகள் குறைக்கப்பட்டு, கோலாலம்பூர் உள்ளூர் திட்டம் 2040 அடிப்படையில் தகுதியான திட்டங்களுக்கு வெறும் 21 நாட்களிலேயே அனுமதி வழங்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் புகார்களை டத்தோ பண்டாரிடம் நேரடியாகத் தெரிவிக்க தெளிவான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.










