ரவாங், ஜன. 18-
கார்களை திருடுவது, கொள்ளையடிப்பது முதலிய குற்றச்செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளையர்கள், போலீசாரின் அதிரடித் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலையில் சிலாங்கூர், ரவாங், பெர்சியாரான் கோத்தா எமரல்டு என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இக்கும்பலைச் சேர்ந்தவர்கள், தாங்கள் நடத்தும் கொள்ளைகளுக்கு வாடகைக் கார்களை இரவலாகப் பெற்று, அவற்றுக்கு போலி எண் பட்டையை பொருத்தி இக்கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சுஹாய்லி முகமட் ஸைன் தெரிவித்தார்.
இக்கும்பல், வழக்கம் போல் தங்களின் வாடகை காரில் போலி எண் பட்டையை பொருத்தி, இன்று அதிகாலையில் கொள்ளையடிக்க முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Op Lejang சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள போலீசார், ரவாங், பெர்சியாரான் கோத்தா எமரல்டு என்ற இடத்தில் நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற கார் ஒன்றை நிறுத்துவதற்கு முயற்சித்தனர்.
கொள்ளையர்கள், காரை நிறுத்துவதற்கு பதிலாக காரில் இருந்தவர்கள், போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அப்போது போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்திய போது மூவரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சுஹாய்லி முகமட் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் 40 மற்றும் 43 வயது மதிக்கத்தக்க இருவரை போலீசார் அடையாளம் கண்டு விட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சுஹாய்லி முகமட் குறிப்பிட்டார்.
அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேகப்பேர்வழிகளுக்கு ஏற்கனவே குற்றப்பதிவுகள் உள்ளன. மேலும் ஒருவரை தொடர்ந்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.







