உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின அமைச்சு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் தீவிர சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ரோன் 95 பெட்ரோல் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஹனிப் பின் அஸாரி தெரிவித்தார்.
"ஷா ஆலாம், பெட்டாலிங் ஜெயா, கோம்பாக் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 'கித்தா கெம்பூர்' திட்டத்தின் கீழ் சோதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பதிவு எண்கொண்ட வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் கொள்கலன்களில் எரிபொருள் நிரப்பப்படுவதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள்" என அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் 809 பெட்ரோல் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் ரோந்துப் படையினர் அடிக்கடி கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.













