புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் கிழக்குகரையோர மாநிலங்கள் உட்பட ஆறு மாநிலங்களில் பெய்து வரும் அடை மழையினால் கடல் அலையைப் போல் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, மீட்கப்பட்டு வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 6.00 மணி வரையில் 28 ஆயிரத்து 230 பேராக உயர்ந்துள்ளது.
துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை வரையில் 25 ஆயிரத்து 938 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை, இன்று காலையில் 28 ஆயிரத்தை தாண்டியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளந்தான், திரெங்கானு, பகாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுடன் புதியதாக ஜோகூர், சபா ஆகிய மேலும் இரண்டு மாநிலங்களிலும் வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது.
கிளந்தான் மாநிலத்தில் 89 மையங்களில் 17 ஆயிரத்து 466 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ளத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக கிளந்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திரெங்கானுவில் 113 மையங்களில் 10 ஆயிரத்து 103 பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர். பகாங்கில் ஒன்பது மையங்களில் 485 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூரில் கோல லங்காட் மாவட்டம் பாதிக்கப்ப்டடுள்ளது. இதேபோன்று சபா மற்றும் ஜோகூரில் முறையே 3 மையங்களில் 169 பேரும், ஒரு மையத்தில் 83 பேரும் அடைக்கலம் புகுந்துள்ளனர். பகாங், கேமரன்மலையில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரெங்கானுவில் டுங்ஙுன் , கெமாமான், பகாங்கில் ஜெரந்துட், குவாந்தான், பெக்கான், ரொம்பின்,ஜோகூரில் செகாமாட், மெர்சிங், கொத்தா திங்கி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்ப்டடுள்ளன என்று தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA ( நட்மா ) தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமையும் கடும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதில் போர்க்கால அடிப்படையில் செயல்படுவதற்கு நட்மா உறுதி பூண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கிய பருவமழையில் வெள்ளத்தினால் இதுவரையில் மூவர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








