ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.08-
கடந்த புதன்கிழமை பட்டர்வொர்த், சுங்கை டூவா, ஃபிளாட் ஶ்ரீ மூர்னி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் முதல் மாடியில் உள்ள தனது வீட்டில் சித்ரா என்று அடையாளம் கூறப்பட்ட பெண் ஒருவர் கொல்லப்பட்டதற்கு , 'பொறாமை' காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட போலீஸ் விசாரணை தெரிவிக்கிறது.
பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு வெளிநாட்டவர் உட்பட மூன்று நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்த மூவரின் கைது மூலம் இந்த வழக்கைத் தீர்க்க முடியும் என்று போலீசார் நம்புகின்றனர். இதுவரை புதிய சந்தேக நபர்கள் யாரும் இதில் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
"இக்கொலைச் சம்பவம் காதல் விவகாரம் அல்லது பொறாமையின் காரணமாக நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனினும், விசாரணை தொடர்வதால் இது குறித்து விரிவான தகவல்களை இப்போது வெளியிட முடியாது," என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளி வேன் ஓட்டுநராகப் பணி புரிந்த 41 வயதுடைய சித்ரா, தனது வீட்டின் படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வீட்டின் கதவு திறந்திருந்தும், கிரில் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்தப் பெண் நீண்ட நேரமாக எந்தப் பதிலும் அளிக்காததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் மதியம் 1.40 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.








