கோலாலம்பூர் சங்காட் பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர தங்கும்விடுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டதாகக் கூறப்படும் விபச்சார கும்பலை முறியடித்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், 152 வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளனர்.
பொதுமக்களின் புகார்கள் மற்றும் இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுத்துறை கண்காணிப்பின் அடிப்படையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
புத்ராஜெயா தலைமையக அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 131 குடிநுழைவுத்துறை அதிகாரிகளும், நான்கு சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து, அந்த தங்கும் விடுதி மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பொழுதுபோக்கு மையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 243 பேர் சோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 194 பேர் வெளிநாட்டவர்களும், 49 பேர் மலேசியர்களும் ஆவர்.
இந்நிலையில், அவர்களில் 152 பேர் முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








