கெடா மாநிலம், சுங்கை பட்டாணி பீடோங் பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் வெளியே நேற்று மதியம் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம்-இல் போலி கணக்கு மூலம் 15 வயது மாணவியை இழிவுபடுத்திய பதிவே, இந்த மோதலுக்குக் காரணம் என கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
இந்த சண்டைக் காட்சி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
சம்பவத்திற்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரணைக்கு அழைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேர்வுகள் முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் சில சாட்சிகளிடம் போலீஸ் விசாரணை நடத்தியது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இரு தரப்பினரும் சமரசமாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டதாகவும், பெற்றோர் அளித்த புகார்களும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் டத்தோ அட்ஸ்லி தெரிவித்தார்.
மேலும், சண்டை காணொளியை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.








