கிள்ளாள், காப்பார் வட்டாரத்தில் இன்று காலை லாரி ஓட்டுநர் ஒருவரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்ட நிலையில், அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர்களை ஒரு கார் மோதி வீழ்த்தியது.
இந்தச் சம்பவம் காலை 9 மணியளவில் நடந்ததாகவும், இது குறித்த புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிலாங்கூர் மாநில போலீஸ் டத்தோ ஷசெலி கஹார் தெரிவித்தார்.
லாரி ஓட்டுநரின் தற்போதைய நிலை குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் சந்தேக நபர்கள் இருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தைச் சாட்சியாகக் கண்ட கார் ஓட்டுநர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைத் தனது வாகனத்தால் மோதித் தடுத்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் நம்பப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து போலீஸ் துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் விவரங்கள் விசாரணைக்குப் பிறகு வெளியிடப்படும் என்று டத்தோ ஷசெலி தெரிவித்தார்.








