ஈப்போ, பிப்ரவரி.04-
கடந்த வாரம் உணவகம் ஒன்றில் ரகளையில் ஈடுபட்டு வைரலான 29 வயதுடைய Nurfarahanim Soaid என்ற பெண், ஈப்போ நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த பெண்மணிக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக் கொண்டார். இருவரைக் காயப்படுத்தியது மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய புகார்களின் அடிப்படையில் அவருக்கு 11 ஆயிரத்து 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 28-ஆம் தேதி காலை 6.26 மணியளவில் ஈப்போ, தாமான் தாசெக் டாமாயில் உள்ள 'எஸ்கே நைனா' (SK Naina) உணவகத்தில் பணியாற்றிய முனியசாமி ரத்தினவேல் நாடார் என்ற ஊழியரை முட்கரண்டியால் தாக்கிக் காயம் ஏற்படுத்தியதாக அந்தப் பெண்மணி குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதே உணவகத்தில் மூன்று உணவுத் தடுப்புக் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்தி, நாச காரியத்தைப் புரிந்ததாக அந்தப் பெண்மணி மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.








