ஈப்போ , ஜூலை 03-
பேராக், ஈப்போ, பெர்ச்சாம்-மில், 8 மாடிகள் கொண்ட தனியார் கட்டடத்தின் கீழ்தளத்தில், கழுத்து பகுதியில் சிறிய அளவிலான ரத்த காயத்துடன், முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர், 81 வயது ஏப் நம் மெங் என அடையாளம் கூறப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளாக, அக்கட்டடம் உள்ள பகுதியில், வசித்துவந்த அம்முதியவர், அங்கு துப்புரவு பணியாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று ஓய்வு நேரமான மாலை மணி 2 அளவில், அம்முதியவரை காணாத சகதொழிலாளர்கள், தொலைப்பேசியில் அவரைத் தொடர்புக் கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
பின்னர், அவரை தேடிய போது, சம்பவ இடத்தில், அம்முதியவர் இடதுபுறமாக படுத்திருந்தவாறு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே, அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற், அபாங் சைனால் அபிதீன் அபாங் அஹ்மத், உடற்கூறு ஆய்வுக்காக, முதியவரின் சடலம் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
அவரது மரணத்தில் குற்றவியல் கூறுகள் இல்லாததால், அதுவொரு திடிர் மரணமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் விவரித்தார்.








