புக்கிட் மெர்தாஜாம், மார்ச்.15-
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். ஜுருவிலிருந்து செபெராங் ஜெயா நோக்கிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார்கள் மீது மோதியதில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய லாரி ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதியானது என செபராங் பிறை தெங்கா காவற்படைத் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார். தற்போது அந்த ஓட்டுநரை மார்ச் 18 வரை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இச்சம்பவம் காரணமாக அந்தச் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.








