பகான் டத்தோ, மார்ச்.07-
பேராக், பகான் டத்தோ, Simpang Masjid Al-Quro’-வில் உள்ள குறுகிய பாலம் மற்றும் சாலையை மேம்படுத்தும் திட்டம் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7,000 குடியிருப்பாளர்கள் இனி தடையற்றப் போக்குவரத்தைப் பெறவுள்ளனர்.
துணைப் பிரதமரும், புற நகர் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று இப்புதிய சாலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
பழைய மற்றும் குறுகிய பாலத்தால் நிலவி வந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் போக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் 'ஸ்கை மிரர்' (Sky Mirror) மற்றும் சூரியகாந்தித் தோட்டம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு இது ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என பேராக் பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.








