செரம்பான், ஜூலை 02-
முதியவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
64 வயதுடைய அந்த முதியவர், சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான், லாபு -வில் கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் தனது தந்தை ஜேசிபி மண்வாரி இயந்திரத்துடன் வேலை செய்து கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத நபர், லாரிக்குள் மண்ணை வாரி போடும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக வீ சுவான் என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட அந்த முதியவரின் 37 வயது மகன் தெரிவித்தார்.
தனது முதலாளியின் உத்தரவின்றி அந்தப் பணியை செய்ய இயலாது என்று தனது தந்தை கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த நபர், கடும் காயங்களுக்கு ஆளாகும அளவிற்கு தனது தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளதாக வீ சுவான் தெரிவித்தார்.








