கோலாலம்பூர், நவம்பர்.13-
நெதர்லாந்தைச் சேர்ந்த இளம் பெண் இவானா ஸ்மித் மரணத்தில், 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குவதை நிறுத்தக் கோரிய அரசாங்கத்தின் மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அரசாங்கம், அந்த இழப்பீட்டுத் தொகையை, இன்றே வட்டியுடன் சேர்த்து, அறக்கட்டளைக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயின் உத்தரவிட்டுள்ளார்.
அதே வேளையில், அரசாங்கம், இவானா குடும்பத்தினருக்கு, செலவுத் தொகையாக 8,000 ரிங்கிட்டையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, டிசம்பர் 7 ஆம் தேதி, இவானா ஸ்மித், கோலாலம்பூரில் உள்ள CapSquare Residence என்ற அடுக்குமாடியின் 20-ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார்.
இச்சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆசியும், அதன் புலன் விசாரணை மெத்தனமாக நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு, இவானா குடும்பத்திற்கு அரசாங்கம் 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








