ஷா ஆலாம், நவம்பர்.10-
சிலாங்கூர், கம்போங் ஜாவா, லாட் 11113 நிலப்பகுதியில் வீற்றிருக்கும் வீடுகளை உடைக்கும் திட்டத்தை ஒத்தி வைக்க சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அனுமதி அளித்துள்ளதாக செந்தேசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரையோர நெடுஞ்சாலைத் திட்டமான WCE- க்கு வழிவிடும் வகையில் அந்த வீடுகள், நாளை செவ்வாய்க்கிழமை உடைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேரந்தவர்கள் SmarSewa திட்டத்தின் கீழ் இடம் மாறிச் செல்வதற்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரியிடம் தாம் செய்து கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூத்த குடிமக்கள், குறிப்பாக வயது கடந்தவர்கள், புதிய இடத்திற்கு இடம் மாறிச் செல்வதற்கு அவர்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்கள் புதிய இடத்திற்கு மாறிச் செல்ல முடியாது என்று சொல்லவில்லை. மாறாக, கால அவகாசத்தை மட்டுமே கோரியுள்ளனர். அவர்கள் எதிர்நோக்கிய சிரமங்களைக் கருத்தில் கொண்டு இவ்விவகாரம் மந்திரி பெசார் பார்வைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக டாக்டர் குணராஜ் கூறினார்.








