கோலபிலா, டிச.6-
நெகிரி செம்பிலான், கோலபிலா, டியோ தொழிற்பேட்டைப்பகுதியில் செயல்பட்டு வரும் கையுறை தயாரிப்புத்தொழிற்சாலையான எச்.எல். ரப்பர் இண்டாஸ்ரிஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம், தனது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வீட்டு வசதி சட்டத்தின் 446 ஆவது விதியின் கீழ் பாதுகாப்பான தங்கும் வசதியைக்கொண்ட இடத்தை ஏற்படுத்திக்கொடுக்க தவறியதற்காக அந்த தொழிற்சாலைக்கு எதிராக மாநில ஆள்பல இலகா விசாரணை அறிக்கையை திறந்துள்ளது.
சம்ந்தப்பட்ட நிறுவனம், தன்னிடம் வேலை செய்யும் அந்நிய நாட்டவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ள தங்கும் இடம், நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகாவிடமிருந்து தங்கும் அனுமதிக்கான எந்தவொரு அங்கீகார சான்றிதழையும் கொண்டிருக்கவில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில மனித வளம், பருவநிலைமாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டளார் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

மாநில ஆள்பல இலாகா, குடிநுழைவுத்துறை, கோலபிலா மாவட்ட போலீசார், வேலையிட சுகாதார பாதுகாப்பு இலாகா, சொக்சோ, சிஐடிபி, கோலபிலா மாவட்ட மன்றம் ஆகிய தரப்பினருடன் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்று டிசம்பர் 5 ஆம் தேதி தாம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் இவ்விவரம் தெரியவந்துள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தங்கும்மிடம், மிக அசுத்தமாகவும், , அடிப்படை வசதியின்றியும் மிக மோசமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஏற்கனவே இதேபோன்ற தவற்றை புரிந்ததற்காக அந்த நிறுவனத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் நெகிரி செம்பிலான் ஆள்பல இலாகா 20 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதை வீரப்பன் சுட்டிக்காட்டினார்.
அந்த நிறுவனம், 80 அந்நியத் தொழிலாளர்கள் உட்பட 185 பேரை வேலைக்கு அமர்த்தியிருப்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.








